Friday, January 30, 2009

முத்துக்குமார்

தங்களுடைய சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக அக்டோபர் மாத மத்தியில் தமிழக அரசியல்கட்சிகள் இலங்கைப் பிரசினையில் மேற்கொண்ட மிகை உணர்வு நிலையின் உச்சம் நேற்று முத்துக்குமார் என்ற இளைஞனின்
தீக்குளிப்பு. அவரைத் தற்கொலைக்கு உந்தியதில், இலங்கைப் பிரசினை நெருப்பில் குளிர்காய முயன்ற தமிழக ஊடகங்களுக்கும் பங்குண்டு.

இரண்டாண்டுகளுக்கு முன்பு (ஆகஸ்ட் 2006) செஞ்சோலையில் குழந்தைகள்
இலங்கை விமானங்களின் தாக்குதலுக்கு பலியான போது தமிழ்நாட்டிலுள்ள தமிழ் ஊடகங்கள் எப்படி நடந்து கொண்டன என்பதையும் இப்போது பிரபாகரன் பற்றிய தொடர், இலங்கை அரசியல் வரலாறு, குட்டிமணி ஜகன்
பற்றிய பழைய தொடரின் மீள்பிரசுரம் எனக் கடை விரித்திருப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊடகங்களின் அக்கறை எதன் மீது எனப் புரியும். தங்கள் அரசின் நிர்வாகத் தோல்விகளால் (மின்வெட்டு, பணவீக்கம்,
விலைவாசி, எரிபொருள் தட்டுப்பாடு) மக்களிடையே ஏற்பட்டிருந்த சினத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு ஆளும் கூட்டணி இலங்கைத் தமிழர் பிரசினையைக் கையிலிடுத்துக் கொண்டதும்,
ஊடகங்கள் இந்த மிகை உணர்வுச் சூழலில் ஒரு 'மார்க்கெட்' இருப்பதை உணர்ந்து கொண்டு களமிறங்கின. தங்கள் பத்திரிகையின் வாசகர்களை (நுகர்வோர் என வாசிக்கவும்) மிகை உணர்வு நிலையிலேயே வைத்திருக்கும் வகையில் செய்திகள்/பேட்டிகள் வெளியிட்டன. அதன் விளைவு நேற்று சாஸ்திரி பவனில் கொழுந்துவிட்டு எரிந்தது.

இன்று என் கவலை எல்லாம், இந்த நெருப்பை மீண்டும் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கி அது இன்னும் பல தற்கொலைகளுக்கு இட்டுச் செல்லக் கூடாதே என்பதுதான்.மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்பதாக வெளியான
அறிவிப்பை அடுத்து ராஜீவ் கோஸ்வாமி தீக்குளித்த போது ஊடகங்கள் அதைப் பற்றி எழுதி விசிறிவிட விளம்பர வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு 18லிருந்து 24 வயதுள்ள 159 இளைஞர்கள் தீக்குளித்தார்கள்.(அன்று தொலைகாட்சி இந்தளவிற்கு பரவியிருக்கவில்லை, கடவுளுக்கு நன்றி ) ஒரு சம்பவம் ஒரு Syndrom ஆக மாறுவதில் ஊடகங்களுக்குக் கணிசமான பங்குண்டு.
இலங்கைப் பிரசினை விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்குமான மோதல் என்ற ஒற்றைப் பரிமாணத்தில் எளிமைப்படுத்தியே பெரும்பாலும் ஊடகங்களில் (வலைப் பதிவுகள் உள்பட) பார்க்கப்படுகிறது. ஆனால்
உண்மையில் அது பல தளங்கள் கொண்டது.

அரசுப்படைகளுக்கும், புலிகளுக்குமிடையே மோதல் நடக்கிறது என்பது கண்ணிற்குத் தெரியும் உண்மை. ஆனால் மோதல் எதன் பொருட்டு? தமிழ் மக்கள் சிங்களர்களுக்குச் சமமான சிவில் உரிமைகளைப் பெறும் பொருட்டு என எளிதாக ஊடகங்கள் எழுதவும் பேசவும் செய்கின்றன. ஆனால் விடுதலைப் புலிகள், சிங்கள அரசு இரண்டுமே தங்களது அதிகார எல்லைகளை விரிவுபடுத்த்க் கொள்ள, விரிவுபடுத்திக் கொண்ட எல்லைகளைத் தக்க வைத்துக் கொள்ள மோதுகின்றன. இதற்கான வழி போர் என அவை தேர்ந்தெடுத்திருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாக
நடைபெற்று வரும் போரில் இந்த இரண்டு தரப்புமே நிரந்தரமான வெற்றிகளைப் பெற்றதில்லை என்று அறிந்தும் அவை இந்த வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன.

விடுதலைப் புலிகள் அதிகாரம் பெற்றால் தமிழர்கள் அதிகாரம் பெறுவார்கள் என்பது முற்றிலும் சரியல்ல என்பதைக் கடந்த கால வரலாறு நமக்குச் சொல்கிறது. தங்கள் அதிகாரத்திற்கு எதிரான கருத்துக்
கொண்டவர்களை -அவர்கள் தமிழர்களே ஆன போதிலும்- அவர்கள் பலமுறை ஒழித்துக் கட்டியிருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதுதான் அவர்களது இலட்சியமாக இருந்திருக்குமானால், அவர்கள் ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். (அது உறுதியளித்த மாநிலக்
கவுன்சில்களின் அதிகாரத்தைப் பின், இந்தப் 18 ஆண்டுகளில், மாநில சுயாட்சிப் போராட்டங்கள் போன்ற அரசியல் விவாதங்கள் (political discourse) நடவடிக்கைகள் (political processes) மூலம் விரிவுபடுத்தியிருக்கமுடியும்.அதை அவர்கள் ஏற்க மறுத்ததற்குக் காரணம் ராஜீவ்-ஜெயவர்த்தன திட்டத்தில்
(scheme) தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதே. பின்னர் ரணில் விக்ரமசிங்கேயோடு 'தேனிலவு' கொண்டாடிய நாட்களில் கூட அவர்கள் ஓர் அதிகாரப் பகிர்வினை எட்டியிருக்க முடியும். ஆனால் விடுதலைப்
புலிகளின் இலட்சியம் தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பது அல்ல, தாங்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதே.

எத்தனை தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற இலங்கை ராணுவத்தின் மூர்கத்தனத்திற்கும், எத்தனை தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை தாங்கள் அதிகாரம் பெற வேண்டுமென்ற விடுதலைப்புலிகளின் முரட்டுப் பிடிவாதத்திற்குமிடையே சாராம்சத்தில் அதிக வேறுபாடுகள் இல்லை.

இந்த மூர்க்கத்தனத்திற்கும், முரட்டுப் பிடிவாதத்திற்குமிடையே இலங்கையை விட்டும் வன்னியை விட்டும் வெளியேறச் சக்தியோ, விருப்பமோ இல்லாத பொதுமக்கள் மாட்டிக் கொண்டு பலியாகி வருகிறார்கள்.எந்த ஒரு
போரிலும் இது போலப் பொதுமக்கள் crossfireல் மாட்டிக் கொள்வது நடக்க்கிற ஒன்றுதான் என்பதை அண்மையில் இராக்கில் உலகம் கண்டிருக்கிறது.

என்றபோதிலும் இலங்கைப் படைகள் கண் மண் தெரியாமல் சிவிலியன்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வருகின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் அங்குள்ள தமிழ் மக்களுக்கு ஏற்படும் அதிகமான இழப்பிற்கு புலிகளின் போர் அணுகுமுறையும் ஒரு காரணம் என அங்கிருந்து வரும்
செய்திகள் உணர்த்துகின்றன.
"We are urgently requesting the Tamil Tigers not to station themselves among the people in the safety zone and fire their artillery - shells and rockets at the army. This will only increase more and more the death of civilians thus endangering the safety of the people," states the Bishop of Jaffna Rt. Rev. Dr. Thomas Savundaranayagam in a letter to President Mahinda Rajapaksa"

இது ஜனவரி 26ம் தேதி வெளியான PTI செய்தி. (இது குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் டெய்லி நியூஸ் எழுதிய தலையங்கத்தைக் காண: http://www.dailynews.lk/2009/01/28/main_Editorial.asp)

"The ICRC urgently appeals to both sides to allow and facilitate the safe and voluntary movement of civilians out of the combat zone."

இது சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஜனவரி 28ம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் (ICRC News Release No. 09/02) காணப்படும் வரிகள். (அழுத்தம் என்னுடையது) வேண்டுகோள் இரண்டு தரப்பிற்கும் விடப்பட்டிருப்பது விடுதலைப் புலிகளும் பொதுமக்களின் வெளியேற்றத்தை மறித்து வருகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

இதை உறுதி செய்வது போல், இன்று (ஜனவரி 30) தமிழக சட்டமன்றத்தில் தமிழக நிதி அமைச்சரும் திமுகவின் பொதுச் செயலாளருமான பேராசிரியர்
அன்பழகன் "இந்தியாவின் தலையீட்டின் பேரில் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற 48 மணி நேரம் போர்நிறுத்தம் செய்ய இலங்கை அரசு முன்வந்துள்ள நிலையில், விடுதலைப் புலிகள் ஏன் அதை மதிக்கவில்லை. இலங்கை அரசின் தற்காலிக போர் நிறுத்தத்தை ஐநா கூட வரவேற்றுள்ளது. போர் நடைபெறும் பகுதியிலிருந்து அப்பாவி மக்கள் வெளியேற புலிகள் அனுமதிக்காதது ஆச்சரியமளிக்கிறது." என்று பேசியிருக்கிறார் (தினமணிச் செய்தி)
அப்பாவிப் பொதுமக்கள் வழக்கத்தை விட அதிக அளவில் இறப்பதற்கும் துயருக்குள்ளாவதற்கும் காரணம் என்ன என்பதை ஊடகங்கள் எடுத்துரைத்திருந்தால் ஒரு வேளை முத்துக்குமார் தன்னை மாய்த்துக் கொள்ளாமல் இருந்திருக்கக் கூடும். பொதுமக்களின் துயர் குறித்து அக்கறை கொள்ளாத பயங்கரவாத இயக்கத்தின் ஊதுகுழலாகத் திகழ்ந்த நம் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் உணர்ச்சி வெறியேற்றி ஓர் இளைஞனைக் கொன்றுவிட்டன.

மூர்க்கத்தனத்திற்கும் முரட்டுக் கோபத்திற்குமிடையே இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்க முடியும்? போரை நிறுத்திவிட்டு இலங்கையை இரண்டாகப் பிரித்து விடுதலைப் புலிகளிடம் ஒரு பகுதியைக்
கொடுத்துவிடுங்கள் என இலங்கை அரசை வற்புறுத்துகிற நிலைப்பாடா? அது தமிழர்களை ஒரு சர்வாதிகர அமைப்பின் கீழ் தள்ளுவதாகாதா? அல்லது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுங்கள் நாங்கள் உங்கள் சார்பாக இலங்கை அரசிடம் பேசுகிறோம் என்ற நிலைப்பாடா? அந்த நிலையைத்தானே அது ராஜிவ் காலத்தில் மேற்கொண்டது? அப்போது இந்தியாவிற்குப் புலிகளிடமிருந்து எத்தகைய ஒத்துழைப்புக் கிடைத்தது
என்பதை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது.

கிளிநொச்சி வீழ்வதற்கு முன்னால் தமிழ்நாட்டிலுள்ள விடுதலைப் புலிகளின் பிரசார பிரங்கிகள் என்ன சொல்லிக் கொண்டிருந்தன? " ஈழத் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக இந்தியா தலையிட வேண்டுமென்று
நாங்கள் கேட்கவில்லை. ஈழத்தை யாருடைய உதவியும் இன்றி புலிகளே வென்றெடுப்பார்கள். இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி செய்யாமல் இருந்தால் போதும் என்றுதான் கேட்கிறோம் ( திருமாவளவனின் நடிகர் சங்க பேச்சு)

அதாவது இந்தியா இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதுதான் பிரசினை. ஆனால் இன்று (ஜனவரி 30) திருமாவளவன் சொல்வது என்ன? "ஒரு விடுதலைப் போராட்டக் குழுவை எதிர்க்க அல்லது அடக்க ஒன்றல்ல... இரண்டல்ல...
ஏழுநாட்டுப் படைகளும், ஏராளமாய் ஆயுதங்களும், போதாததற்கு இனத் துரோகிகளும் வேலை பார்த்துவரும் கொடுமையை உலகில் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா நண்பர்களே... அது இலங்கையில்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது."
(http://thatstamil.oneindia.in/news/2009/01/30/tn-thiruma-hails-prabhakaran.html)

அதாவது இலங்கைக்கு ஏழு நாடுகள் ராணுவ உதவி அளித்துக் கொண்டிருக்கின்றன. எந்த மாதிரியான நாடுகள்?

அதையும் அவரே சொல்கிறார். "பாகிஸ்தான், சீனா, இந்தியா, அமெரிக்கா உள்பட பல அரசுகள் சிங்களவர்களுக்கு துணைபோகின்றன."

இந்தப் பின்னணியில் 29ம் தேதி சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தரும் இந்த செய்தியையும்
(http://in.reuters.com/article/topNews/idINIndia-37728120090129)
கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்:

"While domestic political sensitivities over the fate of Sri Lanka's Tamils forced India to ease its leverage, rivals China and Pakistan stepped into the breach, offering Colombo military assistance in its war against the Tamil Tiger rebels.
China has sold Jian-7 fighters, anti-aircraft guns and JY-11 3D air surveillance radars to the resurgent Sri Lankan army as it seeks to finish one of Asia's longest-running wars by squeezing the Liberation Tigers of Tamil Eelam fighters in a shrinking patch of jungle in the north.
Pakistan also supplied the army small arms, multi-barrel rocket launchers and trained Sri Lankan air force in precision guided attacks against the rebels, strategic analysts said.
"There have been several shipments of weapons from Pakistan. What has made a real difference to the outcome of the war is the Sri Lankan air force which has been rigorously trained by Pakistan in precision-guided attacks.," retired Indian army major general Ashok Mehta said.
India, by contrast, has limited its military assistance to the Sri Lankan army to "defensive weapons".

இந்தச் செய்திகள் சொல்வதென்ன?
1.இலங்கைக்கு ஏழு நாடுகள் உதவி வருகின்றன. (எனவே இந்தியா இலங்கைக்கு உதாவமல் இருப்பதால் அதன் பலம் குன்றி விடப் போவதில்லை. மாறாக பின்னால் என்றேனுமொரு நாள் இந்தியா மீது அதன் கோபம் திரும்பக் கூடும்)

2.சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்குப் போட்டி போட்டுக் கொண்டு உதவி வருகின்றன.இரண்டும் இந்தியாவின் நட்பு நாடுகள் அல்ல. ஏற்கனவே இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தனது நாட்டிலிருந்து உதவி வருகிறது. இனி இலங்கையும் ஒரு தளமாக மாறும் ஆபத்து இருக்கிறது

3) சரி நாம் இலங்கைக்கு உதவி செய்திருக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? அதை கற்பனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நாம் உதவி செய்வதை சற்றே தளர்த்தின 'சைக்கிள் கேப்'பில் பாகிஸ்தான் நுழைந்து விட்டதையும் செய்தி சொல்கிறது.

இலங்கையின் வான்படை வெற்றிகளைக் குவிக்கக் காரணம் அதற்கு பாகிஸ்தானில் கிடைத்த பயிற்சி இந்தியா அல்ல, என்ற தகவல் எட்டியிருந்தால் முத்துக்குமார் ஒருவேளை தன்னை எரியூட்டிக் கொண்டிருந்திருக்க மாட்டார்.

இலங்கையின் கடற்பரப்பில் ஆதிக்கம் செலுத்துவதில் சீனா அக்கறை கொண்டுள்ளது என்பதையும் செய்தி சுட்டிக் காட்டுகிறது:
"The strategic battle in Sri Lanka is seen as part of a wider power struggle in South Asia, involving not only India and Pakistan but also China, which seeks to gain influence in the important economic region.

China has made strides developing strategic assets, like the Gwadar port in Pakistan, the Sri Lankan port of Hambantota and assets in Yangon, part of a strategy to protect shipping lanes.

Sri Lanka sits next to shipping lanes that feed 80 percent of China's and 65 percent of India's oil needs. "

இந்தப் பின்னணியில் இந்தியா ஒரு நாடு என்ற அளவில் இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்யாமல் இருக்க முடியாது. அப்படிச் செய்யாமல் இருந்தால் அது தற்கொலைக்கு சமம். ராணுவ உதவிகள் செய்யும் அதே நேரம் அங்குள்ள தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும் அதைத்தான் இந்தியா செய்து கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் நம் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் எடுத்துச் சொல்லத் தவறிவிட்டார்கள். அப்படிச் சொல்லியிருந்தால் முத்துக்குமார் எரிந்து போகாமல் காப்பாற்றியிருக்கலாம்.

இன்னொன்றையும் ஊடகங்கள் நினைவுபடுத்தியிருக்க வேண்டும். இந்தியாவும் இலங்கையும் தமிழ் பேசும் இரு வேறு நாடுகள். ஒரு மொழி பேசும் பல நாடுகள் உலகில் இருக்கின்றன, உதாரணம் இங்கிலாந்தும் அமெரிக்காவும் ஆங்கிலம் பேசுகின்றன. காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் உருது பேசப்படுகிறது. வங்காளத்திலும் வங்கதேசத்திலும் வங்காளம் பேசப்படுகிறது. சீனத்திலும் சிங்கப்பூரிலும் சீனம் பேசப்படுகிறது.அதே மொழியைப் பேசுகிறார்கள் என்பதாலேயே ஒரு நாடு மற்றொன்றின் உள்நாட்டு
விஷயங்களில் தலையிட முடியாது. தலையிடக் கூடாது.

ஆனால் ஒரு பக்கம் தொப்புள் கொடி உறவென்றும் மற்றொரு பக்கம் தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்றும் நம் அரசியல் வாதிகள் செளகரியம் போல் பேசி வருகிறார்கள். அதைத் தவிர்த்திருந்தால் முத்துக்
குமர்கள் கருகியிருக்க மாட்டார்கள்.

Tuesday, January 13, 2009

கிளிநொச்சிக்குப் பின்னால்...

சர்ச்சைக்குப் பெயர் பெற்ற அரிந்தம் செளத்ரியின் The Sunday Indian 14 மொழிகளில் வெளிவருகிறது. அது தமிழிலும் வெளிவருகிறது. ஆனால் தமிழ் இதழில் சர்ச்சைகள் குறைவு. பல நேரங்களில் தரமான, ஆழமான கட்டுரைகள் படிக்கக் கிடைக்கின்றன.

அண்ணா நூற்றாண்டை ஒட்டி அது வெளியிட்ட இதழ் ஒரு பொக்கிஷம். திராவிட இயக்கங்கள் பற்றி முன்பு ஒரு இதழில் விவாதித்தது.

தமிழ் இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் இளைஞர் அசோகன் கால்நடை மருத்துவர். ஆனால் இதழியலிலும் தமிழிலும் இருக்கும் ஈடுபாட்டின் காரணமாக அந்தப் படிப்பை முடித்த பிறகு தில்லி சென்று Indian Institute of Mass communicationல் இதழியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். அநேகமாக IIMC பட்டம் பெற்ற தமிழ் இதழாளர் இவ்ர் ஒருவராக மட்டுமே இருக்கக்கூடும்.

அவர் இந்த வார தி சன்டே இந்தியனில் இலங்கை நிலைமை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். விடுதலிப் புலிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் உணர்ச்சிவசப்பட்ட குரல்கள் ஒலிக்கும் இன்றைய சூழலில் நிதானத்தோடும், நேர்மையோடும், தெளிவாகவும் எழுதப்பட்டுள்ள அந்தக் கட்டுரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:

கிளிநொச்சிக்குப் பின்னால்

என். அசோகன்

இந்தப் புத்தாண்டு விடுதலைப் புலி களுக்கு கெட்ட செய்தியுடன் புலர்ந்தது. ஜனவரி 2-&ம் தேதி கிளிநொச்சி வீழ்ந்தது என்று வந்த தகவல் உலகமெங்கும் உள்ள ஈழ ஆதரவாளர்களை உலுக்கியிருக்கிறது. இன்னும் சற்று வடக்கே போய் ஆனையிறவையும் பிடித்துவிட்டால் யாழ்ப்பாணத்துடனான தரைவழிப் பாதையான ஏ-9 முழுக்க இலங்கை ராணுவம் வசம் வந்துவிடும். போர் தொடர்ந்து நடக்கிறது.
"இழப்புகளைக் குறைக்க பின்னடைவு ஒரு தந்திரோபாயம்" என்றுதான் ஒவ்வொருமுறை நிலப்பரப்பை இழக்கும்போதும் புலிகள் கூறிவருகிறார்கள். இந்த தடவையும் அப்படித்தான் கூறியிருக்கிறார்கள். ஆனால் இதற்கு மேலும் தந்திரோபாயம் என்று கூறமுடியாது என்பதுதான் போர் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
புலிகள் இழந்த பகுதிகளை பலமுறை மீட்டிருக்கிறார்கள் என்றாலும், அவற்றில் மிக முக்கியமானது 1998 பிப்ரவரியில் அவர்கள் இழந்த கிளிநொச்சியை 'ஓயாத அலைகள்' என்ற தாக்குதல் மூலம் 1998 செப்டம்பரிலேயே கைப்பற்றியது. பிரபாகரனே அந்தத் தாக்குதலின்போது களத்தில் நேரடியாக இருந்து தாக்குதல்களை வழிநடத்தினார். இலங்கைப் படைகள் ஓடஓட விரட்டியடிக்கப்பட்டன.
ஆனால் 1998&ம், 2008&ம் ஒன்றல்ல என்பதுதான் ராணுவ நிபுணர்களின் கருத்து. இலங்கைப் பிரச்னை பற்றி கருத்துச் சொல்பவர்கள் 9/11 தாக்குதலுக்குப் பின்னால் உலகில் மாறியிருக்கும் அரசியல் சூழ்நிலையை எடுத்துக்காட்டுகிறார்கள். "புலிகளின் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப் பட்டுவிட்டன. கடற்புலிகளும் பலவீனமடைந்துவிட்டனர். 30&க்கும் மேற்பட்ட நாடுகளில் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டிருக்கிறது" என்கிறார் இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற உளவுப்பிரிவு அதிகாரி கர்னல் ஆர். ஹரிஹரன். ஆனால் கிளிநொச்சிப் போரின் போது புலிகளுக்கு ஆயுதங்கள் வந்திறங்கின என்கிற ஊடகங்களின் தகவலும் இருப்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இதற்குமுன்பு இருந்த இலங்கை ஜனாதிபதியான பிரேமதாசா, சந்திரிகா, ரனில் ஆகியோர் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். போரும் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் தற்போதைய அதிபர் ராஜபக்சேவுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் அவர் புலிகளை அழிப்பதை மட்டுமே ஒரே குறிகோளாக வைத்து செயல்படுகிறார். முதலில் விடுதலைப்புலிகளை முடித்துவிட்டு, பிறகு அரசியல் தீர்வு பற்றிப் பேசலாம் என்று அவரது போக்காக இருக்கிறது. எனவே இந்த ராணுவ நடவடிக்கை மேலும் வலுப்பெறும். கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவுக்கு போர்க்களம் இடம்மாறும்.

முல்லைத்தீவு தாக்குப்பிடிக்குமா?


2004ல் சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டமான முல்லைத்தீவில்தான் புலிகளின் மிகப்பெரிய ராணுவ முகாம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களின் ஆயுதங்களும் பீரங்கிகளும் அங்குதான் தற்போது வைக்கப்பட்டுள்ளன. அவர்களின் சிறு விமானப்படையும் அங்குதான் தற்போது ஒளித்துவைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. கிளிநொச்சியிலிருந்த மக்களும் இப்போது இங்குள்ள காடுகளுக்குத்தான் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். "இது மிக அடர்த்தியான காடுகள் நிறைந்த பகுதி. ராணுவ நடவடிக்கைகளை அங்கு மேற்கொள்வதே கடினம்" என்கிறார்கள் ராணுவ நிபுணர்கள். இங்கு எம்மாதிரியான பாதுகாப்பு அரண்களை புலிகள் உருவாக்கித் தாக்குவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லா இடங்களிலும் பின்வாங்கியே வந்திருக்கும் புலிகள் தங்கள் இறுதிக்கட்டப் போரை முல்லைத்தீவில் நிகழ்த்துவார்கள். அங்கு ராணுவத்துக்கு எதுவும் எளிதாக இருக்காது என்பதே அனைவரின் கருத்தாகவும் உள்ளது. புலிகள் ஆயுதபலத்துடன் இருப்பதை இலங்கை ராணுவதளபதி சரத்பொன்சேகாவே ஒப்புக்கொண்டுள்ளார். இருந்தபோதும் பின்வாங்கியே வருவதற்கு சர்வதேச சமூகத்தின் முன்னால் தங்களுக்கு போரில் நம்பிக்கை இல்லை. எங்களால் முடியாதபட்சத்தில் தமிழ் மக்களைக் காக்க திருப்பித்தாக்கினோம் என்று கூறி இறுதிக்கட்ட தாக்குதலைத் தொடுக்கவே என்ற ஒரு கருத்தும் உள்ளது.

இழந்த பகுதிகளில்...

ஏற்கெனவே கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை வைத்து இலங்கை அரசு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. அங்கு தேர்தல் நடத்தி அரசு அமைப்பதை புலிகளால் தடை செய்யமுடியவில்லை. ஆனால் அங்கு அம்பாறை மாவட்டம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் புலிகளிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளில் முதலில் மக்களைக் குடியேற்றி அங்கும் ஒரு தேர்தல் நடத்த இலங்கை அரசு முயற்சி செய்யும். தங்களுக்கு ஆதரவான தமிழ்த் தலைவர்களை தேர்தலில் பங்கேற்க வைக்க அரசு முயற்சி செய்யும். "இலங்கையின் மிகப்பெரிய சோகமே அங்கு ராணுவ நடவடிக்கைகள் நடந்தாலும், ஒரு நம்பகமான அரசியல் தீர்வு முன்வைக்கப்படுவதே இல்லை என்பதுதான்" என்கிறார் தசஇயிடம் பேசிய கென்கிழக்காசிய விவகாரங்கள் குறித்த நிபுணரான பேராசிரியர் சூரியநாராயணா.

புலிகளின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும்?

போரை நீட்டிப்பதே அவர்கள் திட்டமாக இருக்கும். மரபு வழியிலான போரை தொடர்ந்து நடத்தமுடியாவிட்டால் கெரில்லா போர் முறையைக் கையாளு வார்கள் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிரபாகரன் எப்படி முடிவெடுப்பார் என்று யாருக்கும் தெரியாது. "பிரபாகரன் நாம் யோசிப்பதுபோல யோசிப்பவர் அல்ல" என்கிறார் ஹரிஹரன். கொழும்பு போன்ற நகரங்களில் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் வல்லமை புலிகளைப் பொறுத்த வரையில் குறைந்துவருகிறது. மிகக் கடுமையான பல கண்காணிப்பு முறைகளைக் கையாண்டு இலங்கை அரசு தலைநகரில் இந்த அச்சத்தால் விழிப்புடன் இருந்துவருகிறது. ஆனாலும் இருமுறை தற்கொலைக் குண்டுகள் வெடித்துவிட்டன. ஆனால் 'ஓயாத அலைகள்' போன்ற இன்னொரு மறுபாய்ச்சலை புலிகள் நிகழ்த்துவார்களா? என்ற கேள்விக்குப் உடனடி பதில் யாரிடமும் இல்லை.

இந்திய நிலைப்பாடு

கிளிநொச்சி வீழ்ந்ததுமே காங்கிரஸ் கட்சி சார்பாக கேட்ட முதல் குரல் "பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும்" என்பதே. அங்கு சிக்கியிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு தீங்கு நேரக்கூடாது என்ற குரலைவிட இதுதான் உச்சமாக ஒலித்தது. இந்திய அரசின் சார்பில் கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன், "ராணுவ நடவடிக்கை மூலம் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காணமுடியாது. பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும் என்பது இந்தியாவின் நீண்டகால கோரிக்கை" என்று கருத்துத் தெரிவித்தார். இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்திய தி.மு.க.வின் நிலையும் இன்று தர்மசங்கடமாகத்தான் இருக்கிறது. வெளியுறவு அமைச்சர் பிரணாப்முகர்ஜியை ஏன் அனுப்பவில்லை என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, "இலங்கை அரசு விரும்பவில்லையே" என்று பதிலளித்திருக்கிறார். இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழர்கள் ஆதரவுக் கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணி வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ், அ.தி.மு.க. அல்லாத பிற கட்சிகளை ஒன்றுதிரட்டி முல்லைத் தீவில் சிக்கியிருக்கும் ஈழத்தமிழர்களுக்காக வலுவான குரலை தமிழகத்தில் எழும்பச் செய்யும் முயற்சி நடக்கிறது. ஆனால் விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் இந்த முயற்சிகளைப் பாதிக்கலாம்.
''சொந்த மக்கள் மீதே விமானத் தாக்குதல் நடத்தும் அரசு இலங்கை அரசு ஒன்றுதான்!''
இலங்கையில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து தெற்காசிய விவகாரங்கள் குறித்த நிபுணரான பேராசிரியர் சூரியநாராயணாவிடம் பேசினோம்:
தற்போதைய இலங்கைச் சூழலில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிட்டுவதற்கு ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா?
இலங்கைப் பிரச்னையில் வருத்தத்துக்குரிய விஷயம் என்பது அங்கு நடக்கும் ராணுவ நடவடிக்கையுடன் அரசியல் தீர்வு எதுவும் முன்வைக்கப்படாமல் இருப்பதுதான். அதிபர் ராஜபக்சே, ராணுவ நடவடிக்கை முடிந்த பிறகுதான் அரசியல் சீர்திருத்தங்கள் பற்றிப் பேசுவேன் என்கிறார். அவரைப் பொறுத்தவரை கூட்டாட்சி முறைக்கு ஒத்துவருபவராகத் தெரியவில்லை. அவர் ராஜபக்சே அரசியல் சாசன திருத்தம் ஏதும் கொண்டுவரப்போவதாகத் தெரியவில்லை. ஒரே இலங்கை (uஸீவீtணீக்ஷீஹ் stணீtமீ)என்பதே அவரது நிலைப்பாடு. தமிழர்களைப் பொறுத்தவரை அரசியல் பின்னோக்கிப் போய்விட்டது.
இப்போது இலங்கையில் இருக்கும் தமிழ் கட்சிகள் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
விடுதலைப் புலிகளின் குரலைத்தான் தமிழ் தேசியக் கூட்டணி (டி.என்.ஏ) பிரதிபலிக்கும். டக்ளஸ் தேவானந்தா, டி.எம்.வி.பி எனப்படும் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவை இலங்கை அரசின் ஆதரவுக் கட்சிகள். அவை ராணுவ நடவடிக்கையை ஆதரிப்பவை என்பதால் அவற்றின் செல்வாக்கு குறைவு. இதில் டி.எம்.வி.பியோ கருணா, பிள்ளையான் இடையே இரண்டாக பிளவு பட்டுவிட்டது. இதில் அதிபர் ராஜபக்சேவின் கை இருக்கிறது என்றே நினைக்கிறேன். யு.என்.பி, ஜேவிபி ஆகிய கட்சிகளையும் ராஜபக்சே உடைத்துவிட்டார். இப்போதைக்கு ராஜபக்சேவின் கைதான் அரசியல் ரீதியாக உயர்ந்திருக்கிறது. அவர் முடிவுதான் செல்லும். பிற கட்சிகள் ஏதும் செய்ய இயலாது.
தற்போதையச் சூழலில் போர் நிலவரம் பற்றிய உங்கள் கருத்தென்ன?
மோதல் பல வடிவங்களில் இன்னும் தொடர்ந்து நடக்கும். புலிகள் மரபுரீதியான போர்முறையில் பின்தங்கி வருகிறார்கள். அவர்கள் நிலப்பரப்பு சுருங்கிவருகிறது. அரசியல்ரீதியாக கிழக்கு மாகாணமும் அவர்களிடம் இல்லை. இலங்கை ராணுவத்தின் விமானப் படை மேற்கொள்ளும் கொடூரமான தாக்குதல்களை அவர்களால் எதிர்கொள்ள் முடியவில்லை. உலகிலேயே சொந்த மக்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தும் ஒரே அரசாக இலங்கை அரசுதான் இருக்கிறது. ஆனால் இதுபோன்ற சூழலில் இருந்து புலிகள் பலமுறை மீண்டுவந்திருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது. 1989&ல் இந்திய அமைதிப்படை விலகிய பிறகு இழந்த பகுதிகளுக்கு அவர்கள் வெற்றிகரமாக மீண்டார்கள். பின்னர் சந்திரிகாவின் ஆட்சியின்போது அவர்கள் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றினார்கள். தமிழ் மக்கள் நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டாட்சி அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசு முன்வைக்குமானால் பிரச்னை தீரலாம். ஆனால் அது நடக்காத சூழல் உருவாக்கும் வெறுப்புணர்வு, புலிகளுக்கு போராளிகளை கிடைத்துக் கொண்டே இருக்கச் செய்யும். தமிழர்கள் அந்நியப்பட்டவர்களாகவே உணர்வார்கள்.

*
தி சன்டே இந்தியனின் இந்த இதழ் பொங்க்லை ஒட்டி 'புலம் பெயர்ந்த பொங்கல்' என்ற ஒரு சிறப்புப் பகுதியும் கொண்டிருக்கிறது. அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி, வ.ஐ.ச.ஜெயபாலன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். முத்துலிங்கத்தின் பத்தி மனதை கரையச் செய்கிறது.
அந்த பத்திகளை இணையத்தில் படிக்கலாம். தி சண்டே இந்தியனின் இணைய முகவரி: http://www.thesundayindian.com/tamil/20090125



Monday, January 12, 2009

திருமங்கலம் தரும் செய்தி

திருமங்கலம் தேர்தல் முடிவுகள் டில்லிப் பத்திரிகையாளர்களுக்கு ஆச்சரியங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. பிசினஸ் ஸ்டாண்டர்ட் ஆசிரியர்களில் ஒருவரான அதிதி படோனிஸ், எப்படி, எப்படி என்று தொலைபேசியில் வியப்புக் கொப்பளிக்கக் கேட்டதையும், வேறு சிலர் இதை நாங்கள் எப்படிப் புரிந்து கொள்வது என்று கேட்டதையும் வைத்துப் பார்க்கும் போது அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது.

தமிழ் நாட்டிலும் சிலருக்கு ஆச்சரியங்கள் இருக்கலாம். .

எனக்கு ஆச்சரியங்கள் இல்லை. ஆனால் இந்த முடிவை நான் எதிர்பார்த்திருந்தேன் எனவும் சொல்ல முடியாது. I was keeping my fingers crossed.

எதிர்பார்த்ததைப் போல இது தனது அரசின் சாதனைகளுக்குக் கிடைத்த வெற்றி என்று கருணாநிதியும், பணநாயகம் ஜனநாயகத்தைத் தோற்கடித்துவிட்டது என்று ஜெயலலிதாவும் அவரது கூட்டணிக் கட்சியினரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

பணம் கொடுத்தார்கள், மிரட்டினார்கள் அதனால் ஆளும் கட்சிக்கு வாக்களித்துவிட்டார்கள் எனச் சொல்வது மக்களை அவமானப்படுத்துவது மட்டுமல்ல அவர்களைக் குறைத்து மதிப்பிடுவதாகும். வாக்கு வித்தியாசத்தைக் கவனிக்கும் போது (40 ஆயிரத்திற்கு சற்றுக் குறைவு) இது வெறும் பணத்தால் மட்டும் ஈட்டப்பட்ட வெற்றி அல்ல எனத் தோன்றுகிறது.

வாக்குச் சாவடிகளில் அதிகாரிகளாக மத்திய அரசின் ஊழியர்கள், வீடியோ பதிவு, துணை ராணுவப் படை, மூன்றடுக்குப் பாதுகாப்பு, நுண் தேர்தல் பார்வையாளர்கள், அன்னியர்கள் வெளியேற்றம், ஊருக்கு வரும் பாதைகள் சீலிடப்பட்டது, நரேஷ் குப்தாவின் அதிரடி விஜயம், ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்கு இவையெல்லாம் தேர்தல் பெருமளவிற்கு- சென்னையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் போல் இல்லாமல்- நடுநிலையோடு நடந்திருக்கிறது என்றுதான் எண்ண வைக்கிறது.

திமுக இந்த இடைத் தேர்தல் அறிவிப்பை உற்சாகமாகவோ, நம்பிக்கையோடோ வரவேற்கவில்லை. வேண்டாத விருந்தாளியாகத்தான் கருதியது. மாநிலத் தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆனையம் எல்லாவற்றையும் கருணாநிதி நேரிடையாகவோ மறைமுகமாகவோ சாடிக் கொண்டிருந்தார்.

அவரது கூட்டணியும் விரிசல் கண்டிருந்தது. இடதுசாரிகள் எதிரணிக்குப் போய்விட்டிருந்தார்கள்.பாமக நடுநிலை என்று சொல்லி ஒதுங்கியது. விடுதலைச் சிறுத்தைகள் பிணக்குக் கொண்டு ஒதுங்கி நிற்பதாகச் செய்திகள் சொல்லின (திருமாவளவன் அதை மறுத்தாலும் அவர் பிரசாரத்திற்குப் போகவில்லை) காங்கிரஸ் மட்டுமே கூட்டணியில் மிஞ்சி நின்றது. ஆனால் இலங்கைத் தமிழர் பிரசினையில் அது மேற்கொண்ட நிலை காரணமாக அது மதிப்பிழந்து விட்டதாகவும், அது ஒரு சுமை (liability என்றும் ஒரு கருத்து உலவியது. லதா, ஸ்டாலின் குழுவின் வேட்பாளர் எனவும், அதனால் அழகிரிக்கு அதிருப்தி எனவும் செய்திகள் வந்தன

மின்வெட்டு, விலைவாசி, உரத் தட்டுப்பாடு என பல பிரசினைகள் ஆளுங்கட்சிக்கு எதிராக இருந்தன.

ஆனால் இதற்கப்புறமும் திமுக வென்றிருக்கிறது. அதுவும் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்! எப்படி?

ஒரு ரூபாய் அரிசி, 'இலவச' நிலம், அரசின் பல இலவசங்கள் மக்களிடம் அரசுக்கு நல்ல பெயரை வாங்கி இருக்கலாம்.( இதில் ஒரு கவனிக்க வேண்டிய அம்சம், திருமங்கலத்தில் இன்னும் கலர் டிவி விநியோகம் நடக்கவில்லை. நேற்றுவரை அது எதிர்கட்சி எம்.எல்.ஏ தொகுதி)

அண்மையில் தில்லியிலும், மத்திய பிரதேசத்திலும் அதற்கு முன்பு குஜராத்திலும் நடந்தது போல நல்லாட்சி என்பது anti incumbency யை அர்த்தமிழக்கச் செய்து விடுகிறது என்பது மறுபடியும் திருமங்கலத்தில் மெய்ப்பிக்கப்பட்டு இருக்கலாம்.

இதெல்லாம் இருக்கலாம்தான்.

ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது.

ஊடகங்களுக்கும் அடித்தள மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாகி இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கும் வெகுஜனங்களுக்குமிடையே ஆன இடைவெளி போல.

ஊடகங்களும் மெய்யான பிரசினைகளை (real issue) விட்டுவிட்டு அவர்கள் எதை முக்கியம் எனக் கருதுகிறார்களோ அதைப் பேசுகிறார்கள் எனத் தோன்றுகிறது.

ஆம் அப்படித்தானென்றால் இது கவலைக்குரிய விஷயம்.

Sunday, January 11, 2009

அ-புனைகதை யுகம் ஆரம்பிக்கிறதோ?

புழுதி இல்லை; நெரிசல் இல்லை; வானை மூடிப் பந்தலிட்டிருந்ததால் வெயில் கூடத் தெரியவில்லை. தேடி வந்து கையில் திணிக்கப்படும் குப்பைகள் கூட அதிகம் இல்லை.(ஒவ்வொரு முறையும் அந்துருண்டையிலிருந்து அஜீரண
மாத்திரை வரையிலான, புத்தகங்களுக்கு சம்பந்தமில்லாத துண்டு விளம்பரங்களைத் தேடி வந்து கையில் கொடுத்து விட்டுப் போவார்கள்.அவற்றை எங்கே போடுவது என்று தெரியாமல் வீடு வரை எடுத்து வந்து வீசியிருக்கிறேன்).

இந்த ஆண்டு புத்தகச் சந்தை எனக்கு சற்று வித்தியாசமாகத்தனிருந்தது. புத்தகச் சந்தையின் 32 ஆண்டுகளில் அநேகமாக 28 ஆண்டுகளுக்குக் குறையாமல் நான் அதற்கு வருகை தந்திருக்கிறேன். ஆனால் இந்தப் பள்ளி மைதானத்தில் நடை பெறும் சந்தைக்கு இப்போதுதான் முதல் முறையாக வருகிறேன்.

நான் சென்றது சனிக்கிழமை (10.1.08) மதியம் மூன்றே முக்கால் மணிக்கு. கூட்டம் அதிகமில்லை. நுழைவுச் சீட்டு வழங்கும் கவுண்டர்களில் ஒன்றை மட்டும் திறந்து வைத்து விட்டு மற்றதை மூடி வைத்திருந்தார்கள்.

நான் புத்தகச் சந்தையைப் பெரும்பாலும் சாதரணமாக சென்னையில் உள்ள புத்தகக் கடைகளில் கிடைக்காத/ காணக் கிடைக்காத நூல்களை வாங்குவதற்கான வாய்ப்பாகத்தான் பயன்படுத்தி வருகிறேன். 70களின் இறுதியில் சிறுபத்திரிகைகளை, அ.மி. மெளனி, தி.ஜா போன்றோரின் நூல்களை நாடி இந்தச் சந்தைக்குப் போவேன். இன்று சிறுபத்திரிகைகள் பெரும் நிறுவனங்களாகிவிட்டன. ஆனால் இலக்கிய உலகில் இலக்கியச் சிற்றேடுகள்
இருப்பதைப் போல, பதிப்புலகில் சிறு பதிப்பகங்கள் உண்டு. அநேகமாக அரசியல் பிரசுங்களை அல்லது அதிகம் அறியப்படாத படைப்பாளிகளின் எழுத்துக்களை அல்லது மொழி பெயர்ப்புக்களை வெளியிடுபவர்களாக அவர்கள்தானிருப்பார்கள். வெகுஜன எழுத்தாளர்களின், நட்சத்திர எழுத்தாளர்களின் நூல்களை சென்னையிலுள்ள எந்தப் புத்தகக் கடையிலும் என்று வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்தச் சிறு வெளியீட்டார்களின் நூல்களை இங்கு விட்டுவிட்டால் பின் தேடிக் காண்பது அரிது. எனவே அவர்களுக்குத்தான்
எனது முன்னுரிமை.

காந்தளகம், பரிசல், திராவிடன், மித்ர, காலச்சுவடு, பயனியர் ஆகிய அரங்குகளில் சில நூல்கள் வாங்கினேன்.உயிர்மை,கீழைக்காற்று, தமிழ்ப் பல்கலைக் கழகம், சந்தியா, அம்ருதா ஆகியவற்றை அடுத்த வருகையின் போது பார்க்க உத்தேசம்.அடையாளம், அலைகள், ஆழி, சாகித்ய அகதாமி, அம்பேத்கர் நூல்கள்
விற்கும் அரங்கு இவற்றில் சில வற்றைப் புரட்டிப் பார்த்தேன்.தமிழினியில் வெங்கடேசனின் புதிய நாவல் (காவல் கோட்டம்) தவிர புதிய நூல்களைப் பார்க்க முடியவில்லை. அங்கே பெரும்பாலும் புனைவிலக்கியமே கண்ணில் பட்டது.

இந்த முறை பொதுவாகவே புது நூல்கள் அதிகமில்லை. ஆனால் சில புதிய முயற்சிகள் வரவேற்கத் தக்கவை.

தமிழ் மண் பதிப்பகத்தில் தமிழக வரலாற்றை காலவரிசையில் பல தொகுதிகளாக வெளியிட்டு இருக்கிறார்கள். சதாசிவப் பண்டாரத்தாருடைய நூல்கள், வேங்கடசாமி நாட்டாருடைய நூல்கள், வெ.சாமிநாதசர்மாவுடைய நூல்களின் தொகுதி ஆகியவை கிடைக்கின்றன.

ப்ராடிஜி வெளியிட்டிருக்கும் கேள்விக்குறி வரிசையும் (என்ஜினியர் ஆகலாமா? மாறுபட்டு சிந்திக்கலாமா? பேசப்பழகலாமா? பிறரைப் புரிந்து கொள்ளலாமா? எனப் பல கேள்விகள்) அது போன்ற ஒரு வரவேற்கத் தக்க முயற்சி. என் டிரைவரின் குழந்தைக்காக பிராடிஜியில் சில நூல்கள் வாங்கச் சென்ற போது மாறுபட்டு சிந்திக்க்லாமாவைப் புரட்டினேன். எளிதான வசீகரிக்கும் நடை. அவர்களின் நூல் வரிசையைக் கண்டு பிரமித்துப் போனேன். மெகலன், ஜார்ஜ் வாஷிங்டனில் ஆரம்பித்து குளோபல் வார்மிங் வரை அறிவியல் சாதனையாளர்கள், வரலாற்று நாயகர்கள், கண்டங்கள், உயிரினங்கள், அறிவியற் சாதனங்கள் என நாம் குழந்தைகளுக்குச் சொல்ல விரும்பும் அனைத்தும் இருக்கின்றன. சில குறிப்பிடத் தகுந்த விடுபடல்கள்: அறிவியலாளர்களில் ரைட்
சகோதர்கள், சார்ல்ஸ் பாபேஜ் அலக்சாண்டர் ஃபிளமிங், வரலாற்று நாயகர்களில் மாசேதுங், ராஜீவ் காந்தி. கல்பனா சாவ்லா. நம் அரசமைப்புச் சட்டம் அல்லது ஜனநாயகம் அல்லது பாராளுமன்றம் பற்றிய ஒரு புத்தகமும் தேவை. சினிமாவை முற்றிலுமாக ஒதுக்க வேண்டியதில்லை.. சத்தியஜித்ரே கூடவா தேற மாட்டார்? அதே போல தமிழ் எழுத்தாளர்களையும் புறக்கணிக்க வேண்டாம். பாரதியாரைத் தவிர வேறு யாரும் அகப்படவில்லை. பாரதிதாசன், கல்கி கூடவா ஒதுக்கப்பட வேண்டும்?. எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லி இன்று குழந்தைகளைத் தூண்டவில்லை என்றால், 50ஆவது புத்தகக் காட்சியில் நாம் கிழவர்களைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். இசை உலகமும் மெளனம் சாதிக்கிறது.

நெடுநாளாக எனக்குள் ஓர் கனவு உண்டு. அதை ப்ராடிஜி முயற்சி செய்து பார்க்கலாம். பெரும்பாலும் குழந்தைப் புத்தகங்கள் பெரியவர்களின் குழந்தைத்தனமாக இருக்கும் அல்லது பெரியவர்கள் தீட்ட விரும்பும் நல்லுலகாக
இருக்கும். ஆனால் குழந்தைகளின் உலகம், சிந்தனை வேறு. சிறு குழந்தையாக இருந்த போது என் சகோதரி மகள் என்னிடம் கேட்டது: குதித்துக் குதித்துப் பார்த்தும் திராட்சைப் பழம் எட்டவில்லை என்றால் ஏன் நரி ஒரு ஏணியைக் கொண்டு அதை எட்ட முயற்சிக்கவில்லை? கார் ஓட்டும் பூனைகளை டிஸ்னி உலகில் சந்தித்த குழந்தைக்கு ஏணியில் நரி ஏறுவது பெரிய காரியமாகத் தோன்றவில்லை. அழ.வள்ளியப்பாவிடம் குழந்தையாக இருந்த போது என் மகன் கேட்ட கேள்வி : படரக் கொம்பில்லை என்றால் ஒரு கம்பை எடுத்து நட்டிருக்கலாமே? பாரி ஏன் ஒரு தேரை விட்டுச் செல்ல வேண்டும்? குழந்தைகளின் லாஜிக் நம்முடைய லாஜிக்கிலிருந்து வேறுபட்டது. எனவே ஏன் குழந்தைகளே குழந்தைகளுக்குப் புத்தகம் 'எழுத' கூடாது? அவர்களுக்கு எழுத வருமா என்பது கேள்வியே இல்லை. அவர்கள் சொல்லட்டும், NHM ஆசிரியர்களில் யாரேனும் எழுதட்டும்.

பொதுவாக புத்தகச் சந்தையில் சக எழுத்தாளர்களை சந்திக்க நேர்வதுண்டு.குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யை இங்குதான் முதலில் சந்தித்தேன். அவர் தன் புகைப்படங்களை வெளியிட்டுக் கொள்ளாமல் ராணுவ ரகசியம் போல்
காப்பாற்றி வந்ததால் அவர்தான் எஸ்.ஏ.பி. என்று பலருக்குத் தெரியாது. எனக்கும் கூட. திசைகள் (அச்சிதழ்) வெளிவந்த சமயம் அது. வானதி அரங்கில் ஏதோ மேய்ந்து கொண்டிருந்த போது என் தோளைத் தொட்டு 'ஜமாய்க்கிறீங்க' என்று காதருகே மெல்லிய குரலில் ஒருவர் சொல்லக் கேட்டுத் திரும்பிய போது அவர்
புன்னகைத்தார்.திருநாவுக்கரசு ஓடி வந்து அறிமுகம் செய்து வைத்தார். அச்சுப் பத்திரிகைகளுக்கு வரும் முன் கையெழுத்துப் பத்திரிகை ஆசிரியராக கல்லூரி மாணவராக சுதாங்கன் அறிமுகம் ஆனதும் ஏதோ ஒரு புத்தகச் சந்தையில்தான். சில ஆண்டுகளுக்கு முன்னால் கூட கிழக்கில் யாராவது எழுத்தாளர்கள் இருந்து
கொண்டிருப்பார்கள் ஆனால் இந்த முறை அதிகம் எழுத்தாளர்களைக் காணவில்லை. தமிழினியில் கண்மணி குணசேகரனைப் பார்த்தேன். அன்னத்தில் மோகனைப் பார்த்தேன். கிழக்கில் வந்து பத்ரியையும் ராகவனையும் தேடினேன். அங்கிருந்த கருந்நீல NHM டி ஷர்ட் அணிந்த ஒருவர் பத்ரி ஆபீசில் மீட்டிங்கில் இருக்கிறார் என்று 'கார்ப்பரேட்' பதிலைச் சொன்னார். ராகவன் வருவார் போவார் ஆனால் எப்போது என்று தெரியாது என்றார். (அப்போது எனக்கு பா.ரா.வின் விபத்துப் பற்றி தெரியாது) ஆனால் இரா.முருகனையும், மருதனையும் சந்தித்தேன்.

எழுத்தாளர்களை சந்திக்க முடியவில்லையே தவிர வாசகர்கள் வழக்கம் போல இன்ப அதிர்ச்சி தந்தார்கள். திருநின்றவூரிலிருந்து வந்திருந்த அறிவுச் செல்வன் பின்னாடியே துரத்திக் கொண்டு வந்து என் சில கதைகளைப் பற்றிப் பேசினார். என் சிறுகதைத் தொகுப்பைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்ன கடையநல்லூர் ஷேக்தாவூத்தை கிழக்கிற்கு அனுப்பி வைத்தேன். நந்தகோபால் என் அறிவியல் புனைகதையான வித்வானை வரிவரியாக நினைவு கூர்ந்து திகைக்க வைத்தார்.

என்றாலும் இந்தப் புத்தகச் சந்தையில் எனக்கு வெளிப்படையாகத் தெரிந்த ஒரு விஷயம்: தமிழ் வாசக ரசனை அ-புனைகதைகள் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறது. புனைகதைகள் அதிகம் வெளியிடும், தமிழினி, அன்னம்
போன்ற அரங்குகளில் அதிக வாசகர்களைக் காணவில்லை. அம்பானியிலிருந்து கிலானி வரை நூல்கள் வெளியிட்டுள்ள கிழக்கில் நிற்க இடமில்லை. அநேகமாக வெகுஜன இதழ்கள், trendஐத் தீர்மானிக்கின்றன என எனக்கு ஒரு சந்தேகம். 70 களின் இறுதியில் வெகுஜன எழுத்தாளர்களின் தொடர்கதைகள் விற்றுத் தீர்ந்தன.
சாண்டியல்யன் இல்லாமல் பலருக்குத் தூக்கம் வரவில்லை. எண்பதுகளில் கடைக்குக் கடை (புதுக்) கவிதை.அப்போது தமிழர்கள் கவிதையை சுவாசித்து கவிதையைத் தின்று கவிதை (போல ஒன்றை) கழிந்து கொண்டிருந்தார்கள். அப்புறம் சிற்றிதழ் இலக்கியவாதிகளின் படைப்புக்கள் அணிவகுத்தன. இந்தக்
காலகட்டங்களில் வெகுஜனப் பத்திரிகைகளை ஆக்ரமித்திருந்தவையும் இவைதான். இப்போது வாரப்பத்திரிகைகளில் புதினங்கள், புனைவிலக்கியங்களுக்கான இடம் குறைந்து விட்டது. ஏகப்பட்ட மனித் தலைகள். அவர்களைப் பற்றிய துணுக்குகள் கட்டுரைகள். (அக்கப்)போர்கள். எல்லோருக்கும் ஒரு நிமிட எலுமிச்சை வெளிச்சம். பத்திரிகைகள்

வாசக ரசனையைத் தீர்மானிக்கின்றனவா அல்லது Vice-versaவா?அறிந்து கொள்ள ஆவல் இன்னொன்றும் கவனித்தேன். சில ஆண்டுகளுக்கு முன் 600 பக்கங்களுக்குக் குறையாத, கெட்டி அட்டையில் கட்டப்பட்ட (ஹார்ட் பவுண்ட்) செய்யப்பட்ட தலையணைப் புத்தகங்கள் நன்றாகவே விற்பனையாகிக்
கொண்டிருந்தன. நான் போன அன்று பார்த்த வாசகர்கள் தலையணைகளை எடுத்துப்பார்த்துவிட்டு விலையைப் பார்த்து மிரண்டு பயபக்தியோடு திரும்ப வைத்தார்கள். பொருளாதார மந்தம் காரணமாயிருக்குமோ?

நான் தேடிப் போன புத்தகங்கள் கிடைக்கவில்லை. பாரதியின் காலவரிசைப்படுத்தப்பட்ட பதிப்புகள் (5 முதல் 9 வரை) தேவை. அகப்படவில்லை. திராவிட இயக்கங்களின் பழைய இதழ்களின் தொகுப்பு (திராவிடன், குடியரசு ஆகிய இதழ்கள்) தேடிப்பார்தேன் கிடைக்கவில்லை. அந்த அதிர்ஷ்டம் இல்லை புத்தகங்களுக்கு சம்பந்தம் இல்லாத பால்கோவாவும், பப்பாளிப் பழத் துண்டுகளும் கூட அரங்கில் விற்பனை ஆகிக் கொண்டிருந்தன. ஆனால் பழைய புத்தகக்கடைகளை ஒழித்துக் கட்டிவிட்டார்கள். முந்தைய புத்தகச் சந்தைகளில் கலைக் கல்லூரிக்கு வெளியே நடைபாதைகளில் அவர்களும் கடைபோடுவார்கள். பள்ளிக்கூட நான் டிடெயிகளையும் pulp fictionயும் சகித்துக் கொண்டு தேடினால் சில முத்துக்களும் அவற்றில் அகப்படும். இந்த சந்தையில் அந்த அதிர்ஷ்டமும் இல்லை.

வாசலில் இருந்த மேடையில் உரையாற்ற வைரமுத்து வந்திருந்தார். (வடுகப்பட்டி) வராக நதியில் வந்துதித்த முத்தே என யாரோ வரவேற்புக் கவிதை வாசிப்பது காதில் விழுந்தது. நதிகளில் முத்துக் குளிக்க முற்படும்
தமிழர்களின் விஞ்ஞானத்தை வியந்து கொண்டே வெளியேறினேன்.

Wednesday, January 07, 2009

கட்டப்பட்ட காவலர்கள்

எந்த ஒரு சமூகத்திலும் அதன் அரசியல்தான் அதன் இலக்கியத்தைத் தீர்மானிக்கிறது; இன்று காலையில் எழுந்து நாம் பல்துலக்குவதிலிருந்து இரவு ஏற்றிவைக்கும் கொசு வர்த்திவரை கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் போல அரசியல் விரவிக்கிடக்கிறது.. அரசியலுக்கும் சமூகத்திற்குமான உறவைக் குறித்து என் கதைகள் விளம்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. எனவே இந்தப் பத்தியில் ஑அரசியல்ஒ பேசப் போவதில்லை. நாம் காணத்தவறிய/ காணமறுக்கிற நம் கண்ணுக்கு எட்டாத சமகால மாந்தர்களின் கதைகளை, அவர்தம் மறுபக்கங்களை இவை பேச முற்படும். அவற்றில் அரசியலும் இருக்கலாம். அது தொடாத வாழ்வு இங்கு ஏது?

*

யிலுக்குக் கிளம்ப இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மேலிருந்தது. நேரத்தை எப்படிக் கொல்வது என்று தெரியாமல் தொலைக்காட்சிகளை மேய்ந்து கொண்டிருந்தேன். உள்ளூர் கம்பிவடச் சானலில் அறியாத முகங்கள் நிறைந்த ஒரு படம் ஓடிக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு தெலுங்குப் படத்தின் தமிழ் பிரதி போலத் தோன்றிய அந்தப் படத்தில் நான் நுழைந்த போது ஒரு காவல் அதிகாரி, லாக்கப்பில் அநேகமாக அரை நிர்வாணமாக இருந்த ஒருவனை மூர்க்கத்தனமாக விளாசிக் கொண்டிருந்தார். அதே படத்தில் நகைச்சுவைக்காக ஒரு கான்ஸ்டபிள் பாத்திரம் கோமாளித்தனமாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது.

நம் காவலர்கள் மூர்க்கமான விலங்குக் குணங்களும், முட்டாள்தனமான கோமாளித்தனமும் ஏதோ ஒரு விகிதத்தில் கலந்து செய்யப்பட்ட உயிரினங்கள் என்பதுதான் பரவலான வெகுஜன அபிப்பிராயம் சினிமா அலுத்துப் போய் செய்திச் சானல்களுக்குத் திரும்பினேன். ந்திரப் பிரதேச வாராங்கல்லில், ஒருதலைக்காதல் வெறியில் இளம்பெண் ஒருவர் மீது சிட் ஊற்றிய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அது விவரித்துக் கொண்டிருந்தது. ஓரொம்பச் சரியான நடவடிக்கை, இவனுகளை எல்லாம் சுட்டுத்தான் கொல்ல வேண்டும்ஔ என்று அருகிலிருந்த என் சகோதரி அதை சிலாகித்துக் கொண்டிருந்தார். ஓ போலீஸ்காரனே நீதிபதியாக இருக்கலாம் என்றால் கோர்ட் எதற்கு, சட்டம்தான் எதற்கு?ஔ என்றேன் நான். ஓநீ சும்மா இரு. மெர்சி கதை மறந்து போச்சா?ஔ என்றார் அவர்.

மெர்சி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) இதே போல் சிட் வீச்சுக்கு உள்ளான ஒரு கல்லூரி மாணவி. அந்த சம்பவத்தில் முகத்தின் ஒரு பகுதி வெந்துபோய் விட்டது. ஏழைக் குடும்பத்துப் பெண். ஓயார் கல்யாணம் செய்துக்குவா?ஔ என்று அவளது தந்தை மருகி மருகி அழுதபோது, ஓ மேலே படிக்க வையுங்கள், கல்வி காப்பாற்றும்ஔ என்று சொல்லி அந்தப் பெண் பல்மருத்துவம் படிக்க என் குடும்பம் உதவி செய்தது. அதைத்தான் அக்கா ஞாபகப்படுத்துகிறார். அந்தத் தொலைக்காட்சி செய்தியைப் பார்த்த போது அந்த வலி அவரைக் கடந்து போயிருக்க வேண்டும்.

விலங்குகளுக்கும் கோமாளிகளுக்கும் இடையில் ஹீரோக்களாகவும் காவலர்கள் இருக்க வேண்டும் என சராசரிப் பொது மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என அவரது விமர்சனம் எனக்குச் சொல்லியது.

அன்று நான் பயணம் செய்த ரயில் பெட்டியில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் பயணித்தார்கள்.இரு சிறு கிராமங்களில் உள்ள காவல் நிலைய ய்வாளர்களாக உள்ள கீழ்த்தட்டு அதிகாரிகள். அவர்களில் ஒருவர் அருகில் இருந்த பயணியிடம் மாலைச் செய்தித்தாளை வாங்கிப் பார்த்தார். வாரங்கல் என்கவுண்டர்தான் அந்த மாலையில் தலைப்புச் செய்தி. ஓஇதிலே போலிசுக்கு நல்ல பேருஔ என்றார் செய்தித்தாளை இரவல் கொடுத்த பயணி. அதிகாரி பேப்பரிலிருந்து கண்களை உயர்த்தி தலையை அசைத்தார். ஓநீங்க என்கவுண்டர் செய்திருக்கிறீர்களா?ஔ என்றார் பயணி அவரிடம்.

அதிகாரி பதில் சொல்லவில்லை. முகத்தில் ஒரு விரக்தி தோய்ந்த புன்னகை நெளிந்தோடியது. பேச்சு எங்கெல்லாமோ ஓடி மணற்கொள்ளையில் வந்து நின்றது. அந்த ய்வாளரின் காவல் நிலையம் தாமிரபரணிக் கரையோரம் உள்ள சிற்றூரில் இருந்தது.ஔ யாரை என்கவுன்டர் பண்ணச் சொல்றீங்க.இப்பெல்லாம் லாரில வந்து லூட் பண்றதில்லை. மாட்டு வண்டில வந்து மணல் அள்ளிக்கிட்டுப் போறாங்க.ஊருக்கு வெளிய நிக்ற லாரில அது லோட் கும். கடாரம் கொண்டான்ல (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) இருக்கிற சிமிண்ட்டு பிளாக் பண்ற ஃபாக்ட்ரித்தான் போகுதுனு எனக்கு நல்லாத் தெரியும். னா என்ன செய்ய? மாட்டு வண்டிக்காரனையா என்கவுண்டர்ல போட்டுத் தள்ள? வண்டிய சீஸ் பண்ணி ஸ்டேஷன்ல வைச்சிருந்தோம். மாட்டுக்கு தீவனம் வாங்கிப் போட்டு மாளலை. மாட்டுக்கு ஏதாவது யிருந்தா என் தோலை உரிச்சிருப்பாங்க. விட்டுட்டோ ம்.

மணல் கந்தனு கேள்விப்பட்டிருப்பீங்க. முன்பு அவனுக்கு ரவுடி கந்தன்னு பேரு. இப்ப மணல் கந்தன். பத்து வருஷத்திற்கு முந்தி இந்த ஏரியால அவன்தான் முதல்ல மணல் அள்ள ரம்பிச்சான். அப்போ மணல்ல இவ்வளவு பணம் இருக்குனு நிறையப் பேருக்குத் தெரியாது. இப்போ அவன் கோடீஸ்வரன். அவனை மடக்கிப் பிடிச்சு கேஸ் போட்டோ ம். ஹைகோர்ட் வரைக்கும் போய் பெயில் வாங்கினான். சம்பவம் நடந்த தேதியில நான் மலேசியாவிலிருந்தேன்னு அவன் சொல்லுதான். அவன் பாஸ்போர்ட்டும் அப்படித்தான் சொல்லுது. னா அன்னிக்குத் தேதியில நான் அவனை நான் கண்ணால இந்த ஊர்ல பார்த்தேன். கோர்ட்ல ஜட்ஜூ என்னைக் கோட்டிக்காரன் மாதிரி பாக்கார்.இந்த மாதிரி பொய் கேஸ் எல்லாம் போடாதீரும்னு எனக்கு அட்வைஸ் பண்ணுதாரு.

இருபதாயிரம் ரூபாய்க்கு பெயில் கிடைக்குதுனு சொல்லுதாங்க. லட்சரூபாய்க்கு பாஸ்போர்ட்டும் கிடைக்கும் போல. இதுக்கு நடுவிலதான் நாங்க கேஸ் போட்டு ரவுடிகளை மடக்கணும். என்ன செய்ய?

சட்டக் கல்லூரி பசங்க அடிச்சுக்கிட்டாங்கள்ல. அன்னிக்கு ஹைவேஸ்ல நடு ரோட்டில மோட்டர் சைக்கிள குறுக்க மறிச்சி நிறுத்திட்டு நிக்கான். கவுர்மெண்ட் பஸ் மேல கல்லு விட்டான்.பிடிச்சு அடிக்கப் போனேன். சார் வேணாம் சாதிக் கலவரம் வந்திரும்னு ஏட்டு மறிச்சு தடுத்திட்டார்.

கொள்ளைக் கேசு ஒண்ணு. திருடனைப் பிடிச்சாச்சு. பொருள் அவன் வீட்டு பீரோல இருக்கு. வீட்டுக்குப் போனோம். அவன் பொண்சாதி வாசலை மறிச்சுக்கிட்டு நிற்கிறா. தைரியம் இருந்தா தாண்டிப் போயிரு பார்ப்போம்னு சவால் விடறா. முடியைப் பிடிச்சு இழுந்தெறிஞ்சிட்டு உள்ள போயிருவேன். அலிகேஷன் யிரும். சாட்சி வைச்சுக்கிட்டுப் போனேன். அப்படியும் அவ வீட்டிலிருந்த 10 பவுன் நகையை நான் களவாண்டேன்னு என் மேலே புகார் கொடுத்திருக்காஔ

ஓஅலிகேஷன்னா என்ன?ஔ என்றார் அருகில் இருந்தவர்.

ஓபெரும்பாலும் மொட்டைப் பெட்டிஷன். மொட்டையா இருந்தாலும் விசாரணை நடக்கும்.அதிகாரிகள் நல்லவங்களா, நேர்மையானவர்களா இருந்தா புரிஞ்சுப்பாங்க. இல்லைனா சங்கடம்தான்ஔ

ஓஅரசியல்வாதிகள் தலையீடு இருக்கா?ஔ என்றேன் நான்.

ஓஅலிகேஷன்னு வரும்போது உதவி செய்ய, அவங்க கட்சியில இருக்கிற உள்ளூர் ரவுடிகளை அடக்கி வைக்க அவங்க உதவி தேவை. ளும்கட்சி, எதிர்கட்சினு எந்தக் கட்சியா இருந்தாலும் அனுசரித்துப் போறதுதான் நடைமுறையில் சாத்தியம். விறைச்சுக்கிட்டு நிற்க முடியாது. மேலதிகாரி மாவட்ட செயலாளரோட நெருக்கமா இருக்கார்னா கீழ இருக்கிற கொசு நாங்க மோதிக்கிட்டு நிக்க முடியுமா? இன்னிக்குத் தேதியில மேல இருக்கிற உச்ச பட்ச அதிகாரியிலிருந்து கீழ இருக்கிற எங்களை மாதிரி இன்ஸ்பெக்டர் வரைக்கும் ளும்கட்சியை, அது எந்தக் கட்சினாலும் சரி, விரோதிச்சுக்க முடியாது. முறைச்சுக்கிட்டா ஒண்ணு தூக்கி அடிச்சிடுவாங்க. இல்லை அலிகேஷன்ல போட்டுத் தள்ளிடுவாங்கஔ

ஓ உங்க வீட்டிலே இதெல்லாம் புரியுமா?ஔ

ஓபுரியும். புரியணும். போலீஸ்காரனுக்கு வாக்கப்படறவ என்னிக்கு வேணாலும் மூட்டையைக் கட்டிக்கிட்டு கிளம்பத் தயாரா இருக்கணும்.ஔ

ஓகுழந்தைகள்?ஔ

ஓஒரே பையன். இந்த இரண்டு வருஷத்தில நாலு ஸ்கூலுக்குப் போயிட்டான். ஏன்னா எனக்கு டிரான்ஸ்பர். என் பையன் என்ன படிக்கிறான்னு கேளுங்க?ஔ
ஓஎன்ன படிக்கிறான்ஔ
ஓஎல்.கே.ஜி.ஔ
ஓஎல்.கே.ஜி.யிலேயா நாலு ஸ்கூல்?ஔ
ஓஎன்ன செய்ய அதான் போலீஸ்காரன் தலையெழுத்துஔ

அவர் சொன்ன வேறு சில விஷயங்களும் கேட்கப் பரிதாபமாகத்தான் இருந்தன. அண்மையில் ஒரு கட்சித் தலைவரின் கார் தாக்கப்பட்டதை அடுத்து ஒரு வாரத்திற்கு மேல் அவர் பகுதியில் ஜாதிக்கலவரம்.தினமும் 2 மணி நேரம்தான் தூங்க முடிந்தது. ஊரில் இரவு 3 மணி வரை ரோந்து போயாக வேண்டும். மறுபடியும் காலையில் ஊர் விழித்துக் கொள்ளும் முன் எழுந்து கொள்ள வேண்டும்.

மும்பையில் தீவிரவாதிகளை எதிர்த்து தீரமுடன் போரிட்டு மடிந்த காவலர்கள் வணங்கத்தக்க வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை.

னால் நம் மத்தியில் கைககள் கட்டப்பட்ட நிலையில் போராடிக் கொண்டே வாழ்கிற இந்தக் காவலர்களின் நிலை அதற்குச் சற்றும் இளைத்ததல்ல.


அம்ருதா ஜனவரி 2009

Sunday, January 04, 2009

மொட்டைமாடியில் திறக்கும் ஜன்னல்.


இந்த வார விகடன் (7/1/2009)தனது பொக்கிஷம் பகுதியில் நான் 33 ஆண்டுகளுக்கு முன் எழுதிய சிறுகதையை மீள் பிரசுரம் செய்திருக்கிறது. அதைப் படித்த நண்பர் ஒருவர் போன் செய்து "நீங்கள் ஏன் இப்போது சிறுகதைகள் எழுதுவது இல்லை?' என்று மெய்யான மனக்குறையுடன் கேட்டார். நான் 2008 நவம்பர் மாதம் கூட கல்கியில் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன்.(அது இந்த வலைப்பதிவுகளில் கூட இருக்கிறது) நான் அதைச் சொன்னபோது "நீங்கள் ஆடிக்கொரு முறை எழுதுவதற்கு பதில் அவ்வப்போது எழுதக் கூடாதா" என்று கேட்டு என்னை மெளனிக்க வைத்தார் அந்த வாசக நண்பர்.
நான் அடிக்கடி சிறுகதைகள் எழுதவில்லை என்பது என்னவோ உண்மைதான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, அநேகமாக வாரந்தோறும் கட்டுரைகள் மூலம் என்னை வெளிப்படுத்திக் கொண்டுதானிருந்திருக்கிறேன்.
நான் எந்த நோக்கத்திற்காக சிறுகதைகள் எழுதி வந்தேனோ, சிறுகதைகள் மூலம் என்ன செய்ய வேண்டும் என விருப்பப்பட்டேனோ அவை இந்தக் கட்டுரைகள் மூலமும் நிறைவேறி உள்ளன. அதனால் இந்தக் கட்டுரைகளை எழுதும் போது எனக்கு மகிழச்சியும், மனநிறைவுமே ஏற்பட்டன.
இலக்கியததை 'உய்விக்கும்' நோக்கத்தோடு நான் சிறுகதைகள் எழுத முற்பட்டதில்லை. வாசகனை அவனது மூளையைக் கொண்டே சிந்திக்க வைக்க வேண்டும் என்பதுதான் என் எழுத்தின் நோக்கம். அது சிறு கதையானாலும் சரி, கட்டுரையானாலும் சரி. அதற்குப் 'பொறி' கொடுக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
நான் க்டந்த இரண்டாண்டுகளில், சிங்கப்பூர் தமிழ் முரசு, புதியபார்வை, உயிர்மை, தினமணி, இந்தியாடுடே, திசைகள், மற்றும் என் வலைப்ப்திவுகளில் எழுதிய கட்டுரைகள் 'என் ஜன்னலுக்கு வெளியே' என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளது. என்நூல்களை வெளியிட்டுவரும் கிழக்குப் பதிப்பகம்தான் இதையும் வெளீயிடுகிறது.

அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளரும், வலைப்பதிவரும், zதமிழ் தொலைக்காட்சியில் செய்திப்பிரிவில் பணியாற்றுபவரும், ஜூனியர் விகடனில் பத்திகள் எழுதுபவ்ருமான ஜென்ராம் நூலை விமர்சிக்கிறார்.

வெளியீடும் விவாதமும் நாளை 5/1/2009 திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு கிழக்குப் பதிப்பக மொட்டை மாடியில் (எல்டாம்ஸ் சாலை ஆழ்வார்பேட்டைசென்னை ) நிகழ இருக்கிறது.

மேலதிகத் தகவல்களுக்கு பத்ரியின் பதிவைப் பார்க்க்:
http://thoughtsintamil.blogspot.com/

'இன்றுள்ள சூழலில் கருத்துக்களும் விவாதங்களும் காற்றையும் நெருப்பையும் போல் அவசியமாக இருக்கிறது' என்று அந்த நூலில் ஒரிடத்தில் எழுதியிருந்தேன். மொட்டைமாடியில் காற்றுக்குப் பஞ்சமில்லை. நெருப்பை நீங்கள் கொண்டு வரலாம்.